Sub Divisions are

Nathaman ,Malaiyaman-Udayar ,

Suruthiman-Moopanar and Nainar are Called Parkavakulam.

All Are Mostly Land Lords In their Villages with Agricultural Base.

In Tamilnadu Spread Over In All Districts.

Majority Lives In Tanjore,Perambalur,Salem,Ramnad,Pudukottai,Madurai & Trichy.

பாரி பறம்பு மலையின் மன்னன். கபிலர் என்னும் செந்நாப் புலவரின் உற்ற நண்பன். பாரியின் வள்ளல் தன்மை உலகறிந்ததே. முல்லைக் கொடியின் கொழு கொம்பாகத் தன் தேரையே நிறுத்தி வள்ளல் பாரி என்னும் புகழ் கொண்டவன். மனித உயிர்களுக்கு மட்டுமன்றி பயிர்களுக்கும் பெருதவிசெய்யும் பெருமை படைததவன். இக்காரணத்தால் கடையேழு வள்ளல்களில் ஒருவனாகத் திகழ்ந்தான்.

மூவேந்தரான சேர சோழ பாண்டிய மன்னர்களும் பாரியின் புகழைக் குறித்துப் பொறாமை கொண்டனர். அவன் நாட்டைக் கைப்பற்ற எண்ணம் கொண்டனர். மூவேந்தரும் சேர்ந்து பறம்பு மலையை முற்றுகை இட்டனர். பல மாதங்களாகியும் பறம்பு மலையைக் கைப்பற்ற இயலவில்லை. வஞ்சனையே உருவான மூவேந்தரும் வஞ்சகத்தால் பாரியை வீழ்த்த எண்ணினர்.போரை விரும்பாத பாரிவள்ளலிடம் கூத்தர் போல் வந்து வஞ்சனையாக அவன் உயிரைக் கவர்ந்தனர்.

பாரி கொல்லப் பட்டதும் பறம்பு மலை மூவேந்தர் வசமாயிற்று. பாரியின் உயிர் நண்பரான கபிலர் பாரியுடனேயே உயிர்
விடத் துணிந்தார். ஆனால் தன் இரு பெண்களையும் கபிலர் வசம் ஒப்படைத்து " இருந்து வருக " எனக் கூறி மடிந்த பாரியின் சொல்லுக்காகத் தன் உயிரைத் தாங்கியிருந்தார். பாரி மகளிரை மணம் செய்து தரும் பொருட்டு பலப் பல மன்னர்களைத் தேடிச் சென்றார். மூவேந்தருக்கு அஞ்சியோ வேறு யாது காரணம் பற்றியோ பாரி மகளிரை மணம் கொள்ள மறுத்தனர் சிற்றரசர்கள். மனமொடிந்த கபிலர் தன் மக்களாகக் கருதிய அங்கவை சங்கவை இருவரையும் திருக்கோவலூரிலுள்ள ஒரு பார்ப்பனரிடம் அடைக்கலமாகத் தந்து விட்டு வேள் பாரியுடன் சேர்வதற்காக தென்பெண்ணை யாற்றின் கண் வடக்கிருந்து உயிர் நீத்தார். இவர் வடக்கிருக்குங்கால் பாடிய பாடல்கள் புறநானூற்றின் கண் இலக்கியச் சான்றாகத் திகழ்கின்றது.

பாரி மகளிர் திருக்கோவிலூர் பார்ப்பனரிடத்தே அடைக்கலப் படுத்த யாது காரணம் என நமக்கு ஐயம் தோன்றுவது இயல்பு. அக்காலத்தே பார்ப்பனரிடம் உள்ள பொருளுக்கோ அவரின் அடைக்கலப் பொருளுக்கோ யாதொரு தீங்கும் செய்ய மாட்டார். மகட்கொடை வேண்டி அவரிடத்துச் செல்வதோ போர் தொடுப்பதோ செய்ய மாட்டார். எனவே அவரின் அடைக்கலப் பொருளான பாரிமகளிற்குத் தீங்கு நேராது என எண்ணினார் கபிலர்.

பாரி மறைந்து ஒரு திங்களாயிற்று. அன்று முழு நிலவு நாள். நிலவைப் பார்த்து அமர்ந்திருந்த பாரியின் மக்கள் இருவருக்கும் கடந்த திங்களன்று தந்தையுடன் அமர்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. துயரம் பொங்க வெண்ணிலவைப் பார்த்தனர். தமிழறிவு மிகுந்த அவர்தம் உள்ளத்திலிருந்து அவலச் சுவை மிகுந்த பாடலொன்று எழுந்தது. இப்பாடல் ஒன்றே இவர்களைப் புலவர் வரிசையில் இடம் பெறச் செய்து விட்டது.



" அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்


எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர் கொளார்


இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்


வென்றெறி முரசின் வேந்தர் எம்


குன்றும் கொண்டார்யாம், எந்தையும் இலமே "

(புறம்;௧௧௨)



இப்பாடல் மிக எளிமையான பாடலாக இருப்பினும் தந்தையை இழந்த பெண்மக்கள் மனத்துயரை அவலச் சுவையாகக் காட்டுகிறது. வென்றெறி முரசு என்றது வஞ்சனையால் வென்ற மூவேந்தரை இகழ்ச்சி தோன்றக் கூறுவதாக அமைந்துள்ளது.

சென்ற திங்களில் எம் தந்தையும் இருந்தார், எங்களது நாடும் இருந்தது. இந்தத் திங்களில் எமது நாடும் இல்லை எம் தந்தையும் எங்களைப் பிரிந்தார். எனத் துயரம் தோன்றக் கூறியுள்ள இப்பாடலில் சோகத்தின் ஊடே இகழ்ச்சியும் தோன்றுமாறு அமைத்துள்ள திறம் நோக்கத் தக்கது.

மிகச் சிறிய பாடலாக இருந்தாலும் பாரி மகளிர் இப்பாடலைத் தமிழகத்திற்குத் தந்ததன் மூலம் தந்தையைப் போலவே அழியாப் புகழைத் தேடிக் கொண்டனர்.இலக்கிய வரிசையில் இடம் பெற்ற இப்பாடல் சிறந்த வரலாற்றுச் சான்றாக விளங்குகிறது.

http://www.keetru.com/literature/review/s_karuna.php

0 comments:

 
Top